
கடந்த 25 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளின் வாழ்க்கை தரம் உயர ஆயிரக்கணக்கான கட்டுரைகளையும் பேட்டிகளையும் எழுதியுள்ளேன்;எழுதி வருகிறேன்.
ஆரம்பக் காலத்திலிருந்தே அண்டை மாநிலமான கர்நாடகா மீது எனக்குக் கசப்பு உண்டு. காரணம், காவிரி பிரச்னையில் அவர்கள் தமிழ்ர்கள் மீது காட்டும் வன்முறைகள் என் முன் வந்து நிற்கும். ஆகையால், அம்மாநிலத்தின் உள்ளே சென்று செய்தி சேகரிக்க விரும்பியதில்லை. ஆனால், கடந்த ஓர் ஆண்டுக் காலமாகக் கர்நாடகா மாநிலத்தில் பணி நிமித்தமாகத் தொடர்ந்து பயணம் செய்ய வாய்ப்புக் கிடைத்தது.
இவ்வளவு நாள் இந்த மாநிலத்தையும் அங்குச் செயல்பட்டு வரும் IIHR உள்ளிட்ட ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகளையும் விவசாயிகளையும் சந்திக்காமல் இருந்துவிட்டோமே? என்று எண்ணத் தோன்றுகிறது.
ஆம், விவசாயத்தையும் விவசாயிகளையும் கொண்டாடும் மாநிலங்களில் கர்நாடகா முன் வரிசையில் நிற்கிறது.
ஒரு காலத்தில் விவசாயத்தைக் கொண்டாடும் மாநிலமாக இருந்த தமிழ்நாடு, அந்தத் தகுதியை ஆந்திராவிடமும் கர்நாடகாவிடமும் தந்து பல மாமாங்கள் ஆகின்றன.

கர்நாடகா பயணம்
அண்மையில் தமிழ்நாடு முழுக்கப் பயணம் செய்தேன். பசு மாடு இல்லாத ஊரே இல்லை என்று சொல்லும் அளவுக்கு எங்கும் பசுக்கள். தமிழ்நாடு விவசாயிகள் பிழைத்துக்கிடக்கப் பசுக்களே காரணம். ஆனால், பசுமாடுகள் மூலம் விவசாயிகளின் வாழ்வு உயரவில்லை. உயிரோடு இருக்கவே உதவுகிறது. ஆனால், கர்நாடகாவின் நிலை வேறு.
தமிழ்நாட்டின் ஆவின் கூட்டுறவு பால் நிறுவனம், குஜராத்தில் உள்ள அமுல் மாதிரியில் உருவானது. ஆவின் ஒரு காலத்தில் வெற்றிக்கொடி கட்டி வந்ததைப் பார்த்து பக்கத்து மாநிலமான கர்நாடகம் நந்தினியை தொடங்கியது.
இன்று நந்தினி நிறுவனம் இந்தியாவின் இரண்டாவது பெரிய பால் கூட்டுறவு நிறுவனம் என்ற இடத்தை எட்டியுள்ளது. காரணம், கர்நாடகாவில் பால் உற்பத்திக்கு வழங்கி வரும் சலுகைகள், ஊக்கம்… இன்னும் பல.
கடந்த ஏழு ஆண்டுகளில், தமிழ்நாட்டில் ஒரு கலப்பின பசுவிலிருந்து தினசரி கிடைக்கும் பால் உற்பத்தி கிட்டத்தட்ட 7 கிலோவுக்கும் குறைவு. 2018 முதல் 2025 வரை, ஒரு கலப்பின பசுவிடமிருந்து கிடைக்கும் மொத்த தினசரி பால் உற்பத்தி 7.1 கிலோவைச் சுற்றியே இருந்தது. 2025 -ம் ஆண்டின் அடிப்படை கால்நடை வளர்ப்பு (BAH- Basic Animal Husbandry Statistics) புள்ளிவிவரங்களின்படி, இது 2023-24 இல் 7.03 கிலோ என்ற குறைந்த அளவிலிருந்து 2024-25 இல் 7.84 கிலோ என்ற உயர்ந்த அளவு வரை மிகவும் குறைவான ஏற்ற இறக்கங்களை மட்டுமே கண்டுள்ளது.
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்புக்கு (ஆவின்) பால் வழங்கும் விவசாயிகள், சரியான தீவனமின்மையே இதற்குக் காரணம் என்று என்னிடம் கூறியுள்ளார்கள். நமது பசுக்களுக்கு ஒரு லிட்டர் பால் உற்பத்தி செய்ய 400 கிராம் கான்சன்ட்ரேட் தீவனம் (புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கொண்டது) தேவை,ஆனால் இவ்வளவு செலவு செய்ய இயலாத சூழலில், தினமும் 10 லிட்டர் பால் கொடுக்கும் திறன் கொண்ட பசுக்கள் ஏழு லிட்டர் மட்டுமே தருகின்றன.
கர்நாடகாவுடன் ஒப்பீடு
அண்டை மாநிலமான கர்நாடகாவில், கலப்பின பசுக்கள் தினமும் 10.71 கிலோ பால் உற்பத்தி செய்கின்றன. அங்கு அரசு விவசாயிகளுக்கு லிட்டருக்கு ரூ.5 மானியம் வழங்குகிறது. சமீபத்தில் இந்த மானியத்தை லிட்டருக்கு ரூ.7 ஆக உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டது. அந்த மாநிலத்தில் டோன்ட் பால் லிட்டருக்கு ரூ.46 விற்கப்படுகிறது.
ஆனால் தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு நேர்மையான விலை கொடுக்கப்படுவதில்லை. இங்கு லிட்டருக்கு ரூ.3 மட்டுமே மானியம் கிடைக்கிறது; பால் ரூ.40 க்கு விற்கப்படுகிறது.

தீவன நிலப்பரப்பில் சரிவு
BAH புள்ளிவிவரங்களின்படி, தமிழ்நாட்டில் தீவன பயிர்களுக்கான நிலப்பரப்பு குறைந்துள்ளது. 2018-19 இல் 48,000 ஹெக்டேர் இருந்தது 2025 இல் 35,000 ஹெக்டேராகச் சரிந்துள்ளது. இதற்கு நேர்மாறாக, கர்நாடகாவில் இதே காலத்தில் 71,000 ஹெக்டேரிலிருந்து 90,000 ஹெக்டேராக உயர்ந்துள்ளது.
ஆவின் மற்றும் அமுல் மாதிரி
‘’ஆவின் நிறுவனத்தில் நாங்கள் பால் உற்பத்திக்கான பயிற்சி பெற்றோம்’’ என்று பல மாநிலங்களில் உள்ள விவசாயிகளும் பால் வளத்துறை அலுவலர்களும் என்னிடம் கூறியதை கேட்கும்போது காதில் தேன் வந்து பாய்வதுபோல இருக்கும். ஆனால், தற்போது ஆவின் நிலையை நினைக்கும் போது, பழையபடி ஆவின் மாற வேண்டும் என எண்ணம் உருவாகும்.
ஆவின் வளர்ச்சி என்பது தமிழ்நாட்டின் வளர்ச்சி, விவசாயிகளின் வளர்ச்சி! எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஆவின் நிலை அப்படியேத்தான் உள்ளது. ஆகவே, ஆவின் அலுவலர்கள்தான் நிர்வாக ரீதியான மாற்றங்களில் ஈடுபட்டுத் தமிழ்நாட்டில் ஆவின் உயர பாடுபட வேண்டும். முடிந்தால் ஓர் எட்டு கர்நாடகாவுக்குச் சென்று நந்தினியைப் பார்த்துவிட்டு வந்து ஆவினை லாபகமரமாக மாற்றுங்கள்! – பொன் செந்தில்குமார்











