பருவநிலை மாற்றத்துக்கு இயற்கை சொல்லும் பதில்
“ஒரு மரம் என்பது வெறும் மரம் அல்ல; அது ஒரு தலைமுறையின் எதிர்காலம்.”
Thank you for reading this post, don't forget to subscribe!இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் அடிக்கடி வலியுறுத்திய கருத்து இதுதான். இன்று உலகம் முழுவதும் பேசப்படும் பருவநிலை மாற்றம், நீர்ப்பற்றாக்குறை, மண் வளச் சீரழிவு, பல்லுயிர் இழப்பு, விவசாய வருமானக் குறைவு போன்ற பல பிரச்சினைகளுக்கும் ஒரே அடிப்படைத் தீர்வாக அவர் மரம் வளர்ப்பைக் கூறினார்.
வெப்பநிலை தொடர்ந்து உயர்கிறது. மழை பெய்யும் காலமும் மாறிவிட்டது. ஒரு பகுதியில் வறட்சி நிலவும்போது, மற்றொரு பகுதியில் பெருவெள்ளம் ஏற்படுகிறது. இத்தகைய மாற்றங்களைச் சமாளிக்க வேண்டுமெனில், முதலில் காடுகளைப் பாதுகாக்க வேண்டும். புதிய மரங்களையும் அதிக அளவில் வளர்க்க வேண்டும். அப்போதுதான் இயற்கையின் சமநிலை மீண்டும் உருவாகும்.
மரங்கள்தான் மழையின் உண்மையான நண்பர்கள்
காடுகள் வெறும் மரங்களின் கூட்டம் அல்ல. அவை மழையை உருவாக்கும் இயற்கையின் உயிர்மூச்சு. மரங்கள் வளிமண்டலத்தில் ஈரப்பதத்தை அதிகரிக்கின்றன. அதனால் மேகங்கள் உருவாகின்றன. பின்னர் மழை பொழிகிறது.
அதுமட்டுமல்ல. பெய்யும் மழைநீரை மண்ணுக்குள் சேமித்து வைப்பதிலும் மரங்களின் பங்கு மிகப் பெரியது. மரங்களின் வேர்கள் நீரை நிலத்தடிக்குள் அனுப்புகின்றன. பின்னர் அதே நீரையே அவை தேவைப்படும் நேரத்தில் மீண்டும் உறிஞ்சி பயன்படுத்துகின்றன. அதனால்தான் குறுகிய காலப் பயிர்கள் வறட்சியில் காய்ந்தாலும், பல மரங்கள் பசுமையாகவே நிற்கின்றன.

ஒவ்வொரு இடத்துக்கும் ஒரு மரம்
எந்த மரத்தை எங்கே வளர்க்க வேண்டும் என்பதையும் நம்மாழ்வார் தெளிவாகக் கூறியுள்ளார். வீட்டைச் சுற்றி வேம்பு, நெல்லி, முருங்கை, கொய்யா, பப்பாளி போன்ற மரங்களை வளர்க்கலாம். குளியல் மற்றும் பாத்திரம் கழுவும் நீர் செல்லும் இடங்களில் வாழை, தென்னை போன்ற மரங்களை நடலாம்.
வெயில் அதிகம் படும் வேலிப்பகுதிகளில் பொருத்தமான மரங்களை வளர்க்கலாம். நிழல் அதிகம் உள்ள இடங்களில் கறிவேப்பிலை நன்றாக வளரும். இவ்வாறு வீட்டின் ஒவ்வொரு மூலையையும் பயனுள்ள பசுமை வளமாக மாற்ற முடியும்.
ஒரே மரம் போதாது… ஒரு சிறிய காடே தேவை
நம்மாழ்வார் வலியுறுத்திய மிக முக்கியமான கருத்து இதுதான். ஒரே வகையான மரங்களை மட்டும் வளர்ப்பது இயற்கையின் விதி அல்ல. காடுகளைப் பாருங்கள். அங்கு பல்வேறு உயரம், தன்மை, பயன்பாடு கொண்ட மரங்கள் ஒன்றுக்கொன்று துணையாக வாழ்கின்றன.
அதே முறையை விவசாய நிலங்களிலும் பின்பற்ற வேண்டும் என்று அவர் கூறினார். ஒரு தோட்டம் என்பது வெறும் தென்னைத் தோட்டமாகவோ, மாமரத் தோட்டமாகவோ இருக்கக் கூடாது. மாறாக, பல அடுக்குகளைக் கொண்ட உயிரியல் அமைப்பாக மாற வேண்டும்.
10 வகையான மரங்கள் இருந்தால் போதும்… தோட்டமே ஒரு காடாகும்
நம்மாழ்வாரின் பார்வையில், ஒரு தோட்டத்தில் குறைந்தது பத்து வகையான மரங்கள் இருக்க வேண்டும்.
- பழங்கள் தரும் மரங்கள்
- கால்நடைகளுக்கான தீவன மரங்கள்
- பசுந்தாள் உரம் தரும் மரங்கள்
- எரிவாயு மற்றும் எரிபொருள் பயன்பாட்டுக்கான மரங்கள்
- வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்க உதவும் மரங்கள்
- நார் தரும் மரங்கள்
- தொழிற்சாலைகளுக்குத் தேவையான மரங்கள்
- வேலிக்குப் பயன்படும் மரங்கள்
- மருத்துவக் குணமிக்க மரங்கள்
- இறுதிச் சடங்குகளுக்குத் தேவையான மரங்கள்
இந்தப் பத்து வகையான மரங்களையும் திட்டமிட்டு வளர்த்தால், அது ஒரு சாதாரண தோட்டமாக இருக்காது. ஒரு சிறிய இயற்கைக் காடாக மாறிவிடும். அந்தக் காடு உணவு தரும். மருந்து தரும். தீவனம் தரும். மண் வளத்தைப் பெருக்கும். பறவைகள், தேனீக்கள், பட்டாம்பூச்சிகள் உள்ளிட்ட பல்லுயிர்களையும் பாதுகாக்கும்.
விவசாயிக்கான இயற்கை ஓய்வூதியத் திட்டம்
மரம் வளர்ப்பது சுற்றுச்சூழலுக்காக மட்டும் செய்யப்படும் பணியல்ல. அது ஒரு பொருளாதார முதலீடும் ஆகும். தேக்கு போன்ற மரங்கள் நீண்ட காலத்திற்குப் பிறகு வருமானம் தரலாம். ஆனால் வேப்பமரம் உள்ளிட்ட பல மரங்கள் சில ஆண்டுகளிலேயே பலன் அளிக்கத் தொடங்குகின்றன.
ஒருமுறை வளர்ந்த மரம் தொடர்ந்து வருமானத்தை உருவாக்கும். பழம் தரும். மரப்பொருள் தரும். மருத்துவப் பயன் தரும். சந்தை மதிப்பும் ஆண்டுதோறும் உயரும். இதனால், மரம் என்பது ஒரு குடும்பத்தின் நிலையான சொத்தாக மாறுகிறது.
‘மரங்கள்தான் நமக்கான ஓய்வூதியம்’
“அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கிடைப்பது போல, மரங்களும் நம் முதுமைக் காலத்தில் பென்ஷன் கொடுக்கும்” என்ற நம்மாழ்வாரின் வார்த்தைகள் இன்று இன்னும் அதிக அர்த்தம் பெறுகின்றன.
விவசாயியின் வங்கிக் கணக்கில் பணம் இல்லாத நாளிலும், நிலத்தில் வளர்ந்திருக்கும் மரங்கள் அவருக்கு நம்பிக்கையாக இருக்கும். அவை தேவையான நேரத்தில் வருமானமாக மாறும். அதே நேரத்தில், அடுத்த தலைமுறைக்கும் மதிப்புமிக்க சொத்தாகத் தொடரும்.
இன்றே ஒரு காடை உருவாக்கத் தொடங்குவோம்
இன்று நாம் நடும் ஒவ்வொரு மரமும் நாளைய மழையாக திரும்பி வரும். அது நிலத்தடி நீராக மாறும். அது பறவைகளின் இல்லமாகும். அது நம் குழந்தைகளின் எதிர்கால வருமானமாகவும் அமையும்.
எனவே, இனி ஒரு மரத்தை மட்டும் நடும் காலம் முடிந்துவிட்டது. பல அடுக்குகளைக் கொண்ட ஒரு சிறிய காடை உருவாக்கும் காலம் தொடங்கியுள்ளது. அந்தப் பசுமைப் புரட்சியே, நம்மாழ்வார் கனவு கண்ட நிலையான விவசாயத்திற்கும், வளமான தமிழ்நாட்டிற்கும் வழிகாட்டும்.
Professor | Journalist | Writer | Orator | Reader | Researcher
Founder & Editor – Tamil Nature , Professor of Practice – தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், பசுமை விகடன் இதழின் மேனாள் இதழாசிரியர்.
கூடுதல் தகவல்கள்: https://tamilnature.com/author/
















மறுமொழி இடவும்