காவிரி ஆறு உற்பத்தியாகும் பசுமை மலைகள் சூழ்ந்த குடகு மண்ணில், ஏப்ரல் 17, 2026 அன்று ஒரு சிறப்பான நிகழ்வு அரங்கேறியது. கர்நாடக மாநிலம், குடகு மாவட்டம், சேட்டல்லியில் இயங்கும் மத்திய தோட்டக்கலை பரிசோதனை நிலையம் (CHES) தனது 80-ம் ஆண்டு விழாவை இந்நாளில் சிறப்பாகக் கொண்டாடியது.
Thank you for reading this post, don't forget to subscribe!இந்த நிலையம் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பு, 1947-ம் ஆண்டு குடகு மாநில அரசால் ஆரஞ்சு ஆராய்ச்சி மையமாக தொடங்கப்பட்டது. பின்னர் 1972-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி ICAR-IIHR-ஐ சேர்ந்த நிலையமாக மாற்றப்பட்டது. அறிவியல் அடிப்படையிலான ஊட்டச்சத்து மற்றும் இதர இடுபொருள் மேலாண்மை குறித்த தீவிர விழிப்புணர்வு பிரச்சாரமும் இதே நாளில் தொடக்கப்பட்டது.
80 ஆண்டுகளில் CHES-இன் பங்களிப்பு
IIHR முதன்மை விஞ்ஞானி மற்றும் விரிவாக்கப் பிரிவு தலைவர் முனைவர் இர. செந்தில்குமார், இந்த நிலையத்தின் சாதனைகளை விரிவாக எடுத்துரைத்தார். குடகின் தட்பவெப்பநிலை தனித்துவமானது என்று குறிப்பிட்ட அவர், அவகாடோ, ரம்புட்டான், மங்குஸ்டீன், பேஷன் ஃப்ரூட், ஆஃப்-சீசன் லிச்சி போன்ற உயர் ரக பழங்கள் இங்கு வெற்றிகரமாக பயிரிடப்படுவதாக தெரிவித்தார். இந்த பழங்கள் ஒரு ஏக்கருக்கு குறைந்தது மூன்று லட்சம் ரூபாய் வரை நிகர லாபம் தரக்கூடியவை என்றார். கடந்த ஓர் ஆண்டில் மட்டும் இந்த நிலையம் அவகாடா பழக்கன்றுகளை ஒரு கோடி ரூபாய்க்கு விற்று சாதனைப் படைத்துள்ளது. இதன் மூலம் 300 ஏக்கரில் அவகாடா சாகுபடி விரிவடைந்துள்ளது. வரும் 30 ஆண்டுகளுக்கும் தொடர்ந்து வருமானம் பெற்றுத்தரும் இந்த பயிர், விவசாயிகளின் வாழ்வை மாற்றக்கூடியது என்று அவர் நம்பிக்கையுடன் கூறினார். டிராகன் ஃப்ரூட் முதல் முதலில் இந்த நிலையத்தில்தான் சோதிக்கப்பட்டது. காவேரி என்ற பேஷன் ஃப்ரூட் ரகம் 1980களிலேயே இங்கிருந்து வெளியிடப்பட்டது. Arka Supreme மற்றும் Arka Coorg Ravi என்ற புதிய ரகங்களும் இங்கிருந்தே வெளியிடப்பட்டுள்ளன.
பூச்சிக்கொல்லி வேண்டாம் — இயற்கை எதிரிகளே போதும்

ICAR-NBAIR இயக்குநர் முனைவர் எஸ்.என். சுசீல் தன் உரையில் விவசாயிகளிடம் நேர்மையான அழைப்பு விடுத்தார். நியூட்டனின் விதியை விவசாயத்திற்கு பொருத்திக் காட்டிய அவர், ஒவ்வொரு பூச்சிக்கும் அதை இயற்கையிலேயே கட்டுப்படுத்தும் ஒட்டுண்ணி அல்லது எதிரி இருக்கிறது என்று விளக்கினார். மியூலிபக் என்ற மாவுப்பூச்சியை கட்டுப்படுத்த 3,200 கோடி ரூபாய் மதிப்புள்ள வேதி மருந்துகள் தேவைப்படும் நிலையில், ஒரே ஒரு ஒட்டுண்ணியை வெளியிட்டு அந்த தொல்லையை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியதை உதாரணமாக சொன்னார். பூச்சி பிரச்சனை வந்தால் நேரடியாக பூச்சிக்கொல்லி கடைக்கு செல்லாதீர்கள். அருகிலுள்ள கிருஷி விஞ்ஞான் கேந்திரம் (KVK) அல்லது பெங்களூரில் உள்ள ICAR-NBAIR நிறுவனத்தை அணுகுங்கள். எந்த பூச்சிக்கும் இயற்கையான தீர்வு உண்டு என்று அவர் உறுதியாக கூறினார்.
IIHR இயக்குநரின் மனதை தொட்ட வார்த்தைகள்

ICAR-IIHR இயக்குநர் முனைவர் துசார் கந்தி பேஹேரா தன் தலைமை உரையில், வேலை செய்ய வேண்டுமானால் பெங்களூரில் உள்ள IIHR போதும். ஆனால் உண்மையிலேயே விவசாயிகளுக்கு சேவை செய்ய வேண்டும் என்றால் சேட்டல்லியில் உள்ள CHES-ல் பணியாற்றுங்கள் என்று சொல்வேன் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். அந்த அளவுக்கு இந்த பரிசோதனை நிலையத்தின் சேவை மகத்தானது என்று சிறப்பித்தார்.
Tamil Farming TV-க்கு சிறந்த தொழில்நுட்ப பரிமாற்று விருது — ஒரு வரலாற்று தருணம்

ஆராய்ச்சி நிலையங்களில் உருவாகும் தொழில்நுட்பங்கள் விவசாயிகளிடம் சேர்வதில்லை என்பது நெடுங்காலமாக இருந்து வரும் குறைபாடு. இந்த இடைவெளியை நிரப்பும் வகையில், கடந்த மார்ச் 17-ம் தேதி பெங்களூரில் நடைபெற்ற அர்க்கா வர்ச்சுவல் ஹார்டிகல்ச்சர் ஃபேர் 2026 என்ற டிஜிட்டல் முன்முயற்சி ஒரு புரட்சியை நிகழ்த்தியது. விஞ்ஞானிகளிடமிருந்து நேரடியாக பதிவுசெய்யப்பட்ட 25 தொழில்நுட்ப காணொளிகள் தமிழ் மொழியில் வெளியிடப்பட்டன. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் விவசாயிகள் தொடர்பு கொண்டனர். 5 சென்ட் நிலம் வைத்திருக்கும் சிறு விவசாயியிலிருந்து 500 ஏக்கர் வைத்திருக்கும் பெரு விவசாயி வரை அனைவரும் பயன்பெற்று வருகின்றனர்.
இந்த அரும்பணியை செய்த Tamil Farming TV யூட்யூப் சேனலுக்கும், அதன் நிறுவனர் பொன் செந்தில்குமாருக்கும் இந்த விழாவில் சிறந்த தொழில்நுட்ப பரிமாற்று விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த விருது வழங்கும் போது முனைவர் இர. செந்தில்குமார் கூறினார், காவிரி ஆறு குடகில் உற்பத்தியாகி தமிழ்நாட்டிற்கு வளம் சேர்ப்பது போல், Tamil Farming TV தொழில்நுட்ப வழிகாட்டலை தமிழ்நாட்டு விவசாயிகளிடம் கொண்டு சென்று வளம் சேர்க்கிறது. அந்த அறப்பணி மேன்மேலும் வளர வேண்டும் என்ற நம்பிக்கையில் இந்த விருதை வழங்குகிறோம் என்றார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள்
இந்த விழாவில் முனைவர் துசார் கந்தி பேஹேரா (இயக்குநர், ICAR-IIHR), முனைவர் எஸ்.என். சுசீல் (இயக்குநர், ICAR-NBAIR), முனைவர் புத்ரா (இயக்குநர், வேளாண்மை துறை, கர்நாடகா அரசு), முனைவர் அர்தபந்து சாஹு (இயக்குநர், ICAR-NIANP, பெங்களூரு) ஆகியோர் கலந்து கொண்டனர். இயற்கை இடுபொருள் மற்றும் தோட்டக்கலை பயிர் ரகங்கள் கண்காட்சியை இவர்கள் தொடக்கி வைத்து சிறப்பு உரை ஆற்றினார்கள். சிறப்பாக செயல்பட்ட அலுவலர்கள், விவசாயிகள், பத்திரிகையாளர்கள் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர். விழாவில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு உயிர் உரங்கள் மற்றும் இயற்கை இடுபொருள்களும் வழங்கப்பட்டன.
முனைவர் இர. செந்தில்குமார் தன் உரையை ஒரு தெளிவான நான்கு தூண்களால் நிறைவு செய்தார். உயர் மதிப்பு பழம் பயிரிடுங்கள். கழிவை உரமாக்குங்கள். பூச்சிக்கொல்லி விலக்குங்கள். தொழில்நுட்பம் தேடுங்கள். இந்த நான்கு தூண்களில் நின்றால், இந்திய விவசாயம் மீண்டும் செழிக்கும். விவசாயியும் ஆரோக்கியமான தேசமும் உருவாகும் என்று நம்பிக்கையுடன் கூறினார்.
இந்த நிகழ்ச்சி குறித்த காணொளி… இங்கே…
Professor | Journalist | Writer | Orator | Reader | Researcher
Founder & Editor – Tamil Nature , Professor of Practice – தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், பசுமை விகடன் இதழின் மேனாள் இதழாசிரியர்.
கூடுதல் தகவல்கள்: https://tamilnature.com/author/













